சனி, அக்டோபர் 15, 2016

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் XVII சாக்கிய நாயனார் கோவில்

சாக்கிய நாயனர்  கோவில்  (அ) திருமிகு வீரட்டானேசுரர்   கோவில்


அமைவிடம் 
ஊர்                            : கோனேரி குப்பம்
வட்டம்                    : காஞ்சீவரம் வட்டம்
மாவட்டம்              : காஞ்சீவரம் மாவட்டம்
சாக்கிய நாயனர்  கோவில் காஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கோனேரிகுப்பத்தில் உள்ளது. மரியா அக்ஸ்லியம் பெண்கள் மேல் நிலை பள்ளி அருகில் உள்ளது இக்கோவில்.

பௌத்த அடையாளங்கள் 
மிகப் பழமையான (பருமனில் பெருத்து) போதி மரம் ஒன்று இங்குள்ளது. இக்கோயில் உள்ளே புத்தரது பாதபீடிகை மற்றும் சாக்கிய நாயனார் படிமம் (அஸ்தி) உள்ளது.


டாக்டர் ம. இராசமாணிக்கனார் 
நம்பியாண்டார் நம்பிக்கு ( கி. பி 985 - 1014) ஏறத்தாழ 100 ஆண்டுகள் பின் வந்த சேக்கிழார் (கி. பி 1113 - 1150) பெரிய புராணத்தை எழுதினார். அப்பர் மற்றும் சம்பந்தர்க்கு காலத்திற்கு முற்பட்டவர் சாக்கிய நாயனார். சாக்கிய நாயனார் காலம் கி, பி 400 - 600. சாக்கிய நாயனார் காஞ்சிக்கு அருகில் சங்க மங்கை என்னும் ஊரில் பிறந்தவர். இவர் வேளாளர் மரபில் தோன்றினார்.  காஞ்சிக்கு சென்று பல சமயங்களை ஆய்வு செய்தவர். சாக்கியர் என்பது காரணப்பெயர்.  பௌத்த வேடத்துடன் சிவலிங்க வழிபாடு செய்தவர். சிவனை கல் எறிந்து வழிபட்டார்.  ( நூல் பெரிய புராண ஆராய்ச்சி )  

 எழுத்தாளர் மு.நீலகண்டன் 
பௌத்தம் காஞ்சியில் பலமான செல்வாக்குடனும், சிறப்புடனும் இருந்தமையால் வெளிப் படையாகப் பௌத்த சமயத்தை விட்டுச் சைவ சமயத்திற்கு வர சாக்கியரால் இயலாமற்போயிற்று. இதனால், பௌத்தத் துறவிக்கோலத்தை மாற்றாமல் ஒரு சிவலிங்கத்தைச் சிறுகல்லால் எறிந்து பூசை செய்து வந்தார். 

அறிஞர் அண்ணாவின்  வினாவும்  விளக்கமும்
01. சாக்கியர், முதலில் எந்தச் சமயவழி நின்றார்?
சாக்கியர் முதலில் எந்தச் சமயவழி நின்றார் என்பதனை அறிய புராணத்தில் எவ்வித சான்றும் இல்லை. சாக்கியர் வேளாளர் மரபிலே தோன்றியவர் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. இதனைக்கொண்டு சாக்கியர், முதலில் எந்தச் சமயத்தைச் சார்ந்தவர் என்று எப்படிக் கூறமுடியும்? 
பெரியபுராணம் எழுதுவதற்கு முதல் நூல் வகுத்துக் கொடுத்த நம்பியாண்டார் நம்பிக்கும், பெரியபுராணத்தை எழுதிய சேக்கிழாருக்கும் சாக்கியர், முதலில் எந்தச் சமயத்தை சேர்ந்தவர் என்று தெரியாதா அல்லது தெரிந்தும் மறைத்தார்களா?
02. சாக்கியர்  என்ன ஆராய்ச்சி செய்தார்?
சாக்கியர் எந்தச் சமயம் உண்மையான சமயம் என்று ஆய்வு செய்தாரா அல்லது  துன்பங்களை நீக்கக்கூடிய சமயம் எது என்று ஆய்வு செய்தாரா?
03. சாக்கியருக்குத் துன்பங்களை நீக்கிக் கொள்வதற்கு ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டும்  ன்ற எண்ணம் ஏன் தோன்றிற்று? எப்படித் தோன்றிற்று? 
எந்த ஒரு சமயத்தையும் சாராது பொதுநெறியில் நிற்கும் ஒருவருக்குப், பிறப்புத் துன்பங்களை நீக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் தோன்றாது. காரணம் பிறப்பினாலும் இறப்பினாலும் துன்பங்களே உண்டாகின்றன என்ற கோட்பாடு சமய நூற்களில் தான் வலியுறுத்தப்பட்டுள்ளன. பொது அறிவு நூல்களில் அது கூறப்படவில்லை.
சாக்கியர் தாம் இருந்த முதல் சமயத்தில் துன்பங்களை நீக்குவதற்குரிய வழிகள் காணப்படவில்லை என்பதால் துன்பங்களை நீக்கிக்கொள்ள வழிகளை காட்டும் ஒரு சமயத்தை நாட விரும்பியிருக்க வேண்டும்.
04. சங்கமங்கை என்னும் ஊரில் இருந்த சாக்கியர் காஞ்சீபுரத்துக்குச் சென்றதற்கு காரணம் என்ன? 
இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. 01. சாக்கியர் கல்வியறிவு இல்லாத காரணத்தால் காஞ்சீபுரம் சென்றார். 02. சாக்கியரின் ஊரில் சமய நூல்களைக் கற்றுத் தெளிந்த எவரும் இல்லை அதனால் அவர் தம்முடைய ஊரைவிட்டுக் காஞ்சீபுரம் சென்றார்.
முதல் காரணம் ஏற்புடையதாக இல்லை. ஏனென்றால், சாக்கியர் கல்வியறிவில் சிறந்தவர். அவர் ஓர் ஆராய்ச்சி நிபுணர். இதனை பெரியபுராணமே கூறுகிறது.  எனவே, அவர், கல்வியறிவு இல்லாத காரணத்தால் காஞ்சீபுரம் சென்றார் என்று கூறமுடியாது.
இரண்டாவது காரணம்  ஏற்புடையதாக இருக்கிறது. தம்மை விட கல்வியறிவிலும், சமய ஆராய்ச்சியிலும் திறமையுடையோர் காஞ்சீபுரத்தில் இருக்கின்றனர் எனவே அங்கு சென்று தம்முடைய ஐயப்பாட்டினை நீக்கிக் கொள்ளலாம் என்று எண்ணிக் காஞ்சீபுரம் சென்றார் என்பது சரியானதாக இருக்கும். 
05. சாக்கியரை பிக்குவாக (பௌத்த துறவியாக) மாற யாராவது அவரை கேட்டார்களா?
காஞ்சி சென்ற  சாக்கியர் பல வழிகளில் தம்முடைய ஆராய்ச்சியைச் செய்து பௌத்த சமயத்தைத் தழுவினார். பௌத்த பிக்குவாகவும் மாறினார். பௌத்தம் ஏற்றும் அவர் தம்முடைய ஆராய்ச்சியை நிறுத்தாமல் நடத்தி வந்தார். கடைசியில் சைவமே சிறந்த சமயமெனக் கண்டு அச்சமய வழி நின்றார் என்றும் கூறப்படுகின்றது.
முதலில் அவர் செய்த ஆராய்ச்சியினால்தான் பௌத்தம் ஏற்றார். ஏற்ற பின்னரும் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார் என்பது விந்தையானது. தம்முடைய ஐயப்பாட்டினை பௌத்தம் நீக்கவில்லை என்றால் பௌத்தம் தழுவிய சாக்கியர் பிக்குவாக மாறியது ஏன்?
சாக்கியரை பிக்குவாக மாற யாராவது அவரை கேட்டார்களா? அப்படி கேட்டிருந்தாலும், இன்னும் என்னுடைய ஐயம் நீங்கவில்லை, ஆராய்ச்சியும் முடியவில்லை, இன்னும் பல சமயங்களை ஆராயப்போகின்றேன் என்று கூறியிருக்கலாம்.
06. சாக்கியர் சைவ சமயத்தை பின்பற்ற அச்சப்பட்டாரா?
பௌத்தம் ஏற்ற பின் சாக்கியர் தொடர்ந்த ஆராய்ச்சியால் சைவமே உண்மைச் சமயமெனக் கண்டறிந்த பின்னர் அதனை பின்பற்ற  அச்சப்பட்டார் என்பது தெரியவில்லை. பொய் எது மெய் எது என்று கண்டறிந்த ஒருவர் பொய்யை புறக்கணித்து விட்டு மெய்யை பின்பற்ற வேண்டும்.

சாக்கியர் தம்மை பிக்குவாக பிறருக்கு காட்டிக்கொண்டார்.(சீவர ஆடையை தவிர்க்கவில்லை. சாக்கியர் என்ற காரண பெயரையும் நீக்கவில்லை. பிக்கு சங்கத்தில் தான் தாங்கினார். இறந்த பின்னும் அவரின் படிமம் அருகில் புத்த பாதம் வைக்கப்பட்டது )

சைவ சமயத்தைப் பின்பற்றுவதற்கு அறிகுறியாக எதையும் அவர் காட்டிக்கொள்ளவில்லை. (திருநீறு  பூசிக்கொள்ளவில்லை அக்கமணியை அணியவில்லை)
07. சைவத்தை ஆராய்ச்சி செய்த சாக்கியருக்கு கடவுளை எப்படி வழிபடுவது என்பது தெரியாதா? 
பல சமயங்களை ஆராய்ந்த சாக்கியருக்கு கடவுளை எப்படி வழிபடுவது என்பது தெரியாமல் இருக்குமா? உண்மை என்னவென்றால் சினம் கொண்டு சிவலிங்கத்தை  கல்லால் அடித்தார் என்பது தான் உண்மை.
08. பௌத்தரான சாக்கியர் எவ்வாறு பெரிய புராணத்தில் இடம் பெற்றார்? 
பெரிய புராணம் என்ற ஒரு நூலை வெளியிட்டு அதன் வாயிலாகச் சைவ சமயத்துக்கு உயர்வு தேட முயன்றவர்கள் பல கதைகளைப் புனைந்தும், மாற்றியும் திரித்தும் தமக்கேற்றபடி தொகுத்துக் கொண்டார்கள். திரித்துக் கூறப்பட்ட கதைகளில் சாக்கியர் நிகழ்ச்சியும் ஒன்று. பௌத்த பிக்குவின் வரலாற்றைத் தலைகீழாக்கி அதனை ஒரு சிவனடியாரின் வரலாறாக மாற்றிவிட்டனர்
சிலையமைப்பு
பௌத்தத்தில் புத்தருக்கும் போதிசத்துவர்க்கும் தான் சிலைகள் அமைப்பது வழக்கம். என்வே சாக்கிய நாயனாருக்கு சிலை அமைந்த்திருக்க வாய்ப்பு இல்லை.  கோவில்களில் காணப்படும் சாக்கிய நாயனாரின் சிலைகளில் பௌத்த அடையாளங்கள்  ஏதும் இல்லை. அவரின் சிலை சைவராக அமைக்கப்பட்டுள்ளது. 

நின்ற நிலை. வணங்கும் கை. தொங்கிய முடி. கால் அணி (தண்டை). கை அணி. கழுத்து அணிகள். இடையணிகள். முப்புரி நூல். தோள்பட்டை அணி.       

உதாரணமாக 63 நாயன்மார்களில் சாக்கிய நாயனாரின் தலைமுடியை (இரு பக்கமும் தொங்கும் தலை முடி) சடைமுடியாக மாற்றினால் அவர் திரு நீலகண்டர் ஆவார்.   இரு பக்கமும் தொங்கும் தலை முடியை  திருமுடியாக மாற்றினால் அவர் இயற்க்கை நாயனார் ஆவார்.  இரு பக்கமும் தொங்கும் தலை முடியை  வலது பக்கம் சாய்ந்த சடைமுடியாக மாற்றினால் அவர் இளையான் குடி மாறனார் ஆவார். இரு பக்கமும் தொங்கும் தலை முடியை உருத்திராக்க முடியாக மாற்றினால் அவர் மெய்ப்பொருள் நாயனார் ஆவார். திருமுடியும் தொரட்டி இருந்தால் அவர் வீரன் மீண்டார் ஆவார்  

விளக்கம் 
01. பௌத்தம் ஏற்பது எளிது. அனால் பௌத்த பிக்குவாக மாறுவது எளிதானது இல்லை. காரணங்களில் ஒன்று மனதையும் செயலையும் மாசு அற்றதாக செய்ய பௌத்தம் இல்லறத்தாரை ஊக்குவிக்குமே தவிர கட்டாயப்படுத்துவதில்லை. ஆனால் பிக்குவாவது எளிதானது அல்ல. ஒருவரை கட்டாயப்படுத்தி பிக்குவாக்க முடியாது. பிக்குகள் துறவு வாழ்க்கையை மேற்கொண்டவர்கள். அவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளது. திரி பிடகத்தில் (முக்கூடை) ஒரு பிடகம் பிக்குகளுக்கு உரியது. பிக்குவான ஒருவர் துறவை துறந்து இல்லறம் ஏற்பது என்பது மிக எளிது. எனவே சாக்கியர் விரும்பினால் பௌத்த துறவு வாழ்வை நீக்கி வாழ்ந்திருக்கலாம்

02. சாக்கிய நாயனர்  கோவில் தூண்கள் பல அக்கோவில் அருகில் புதர் போன்று இருக்குமிடத்தில் வைக்கப்பட்டுள்ளது. புதர்கள் இல்லாமல் இருந்தால் வேறு ஏதாவது அடையாளம் இருக்கிறதா என்று கண்டறிய உதைவியிருக்கும் 

மேலும் விரிவாக படிக்க உதவும் வலைத்தளங்கள் 
அறிஞர் அண்ணாவின் வினாவும் விளக்கமும்
எழுத்தாளர் மு.நீலகண்டன்

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக